காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் சன்னதி தெருவில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அகற்றினர். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், சன்னதி தெருவில் போக்குவரத்திற்கு இடையூறாக பல கடைகள் உள்ளன. சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை, அவ்வப்போது அகற்றினாலும் மீண்டும் பழைய நிலையே காணப்படுகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து, மாநகராட்சி ஆணையர் நாராயணன் காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவ விழாவிற்காக மட்டுமல்லாமல், நிரந்தரமாக ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்தார். அதனால், சன்னதி தெரு சாலையோர ஆக்கிரமிப்பு கடைக்காரர்களிடம் ஏற்கனவே கடைகளை அகற்றுவது குறித்து தெரிவித்து இருந்தார்.