காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் சன்னதி தெருவில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அகற்றினர். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், சன்னதி தெருவில் போக்குவரத்திற்கு இடையூறாக பல கடைகள் உள்ளன. சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை, அவ்வப்போது அகற்றினாலும் மீண்டும் பழைய நிலையே காணப்படுகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து, மாநகராட்சி ஆணையர் நாராயணன் காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவ விழாவிற்காக மட்டுமல்லாமல், நிரந்தரமாக ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்தார். அதனால், சன்னதி தெரு சாலையோர ஆக்கிரமிப்பு கடைக்காரர்களிடம் ஏற்கனவே கடைகளை அகற்றுவது குறித்து தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், நேற்று சாலையோரம் ஆக்கிரமிப்பில் உள்ள நடைபாதை கடைகளை மாநகராட்சி ஆணையர் நாராயணன், மாநகராட்சி ஊழியர்கள் உடன் போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பின்போது எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் தரிசனம் செய்ய வந்த பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல், வடக்கு மாடவீதியில் நடைபாதையில் உள்ள கடைகளையும் அகற்றும் பணி நடந்து வருகிறது.

Related Stories: