நன்னடத்தை மீறிய வாலிபர் 2 பேருக்கு சிறை

கோவை, ஜூன் 25: கோவையில் நன்னடத்தை மீறிய வாலிபர்கள் 2 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கோவை புலியகுளம் ஏரிமேடு பகுதியை சேர்ந்தவர்கள் பெனடிக்ட் வர்கீஸ் (33), லூவிஸ் என்கிற ஜோஸ் என்கிற ஜோஸ்வா (30). இவர்கள் 2 பேர் மீதும் கோவை ராமநாதபுரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இதில், பெனடிக் வர்கீஸ் மீது 11 வழக்குகளும், லூவிஸ் என்கிற ஜோஸ் மீது 16 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன் கோவை தெற்கு போலீஸ் துணை கமிஷனர் முன் ஆஜராகி இனி ஒரு ஆண்டிற்கு எவ்வித பொது அமைதிக்கு கேடு விளைவிக்கும் எந்த குற்றச்செயலிலும் ஈடுபட மாட்டேன் என எழுதி கொடுத்து உள்ளனர்.

இதனிடையே அவர்கள் கடந்த 17ம் தேதி போக்சோ வழக்கில் உள்ள சாட்சிகளை மிரட்டிய வழக்கில் ரேஸ்கோர்ஸ் போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள் எழுதி கொடுத்த நன்னடத்தை பிணையை மீறியதால் லூவிஸ் என்கிற ஜோஸ் என்கிற ஜோஸ்வாவை 197 நாட்களுக்கும், பெனடிக்ட் வர்கீஸ் என்பவரை 284 நாட்களுக்கும் சிறையில் அடைக்க மாநகர் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வழிகாட்டுதல் பேரில் துணை கமிஷனர் சிலம்பரசன் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் இருவரும் கோவை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.

Related Stories: