பள்ளி, பாலிடெக்னிக், கல்லூரியில் படிக்கும் பிசி, எம்பிசி மாணவ, மாணவிகள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

திருவாரூர், ஜூன் 25: திருவாரூர் மாவட்டத்தில் பி.சி மற்றும் எம்.பி.சி வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவிகள் அரசின் விடுதிகளில் தங்கி பயில விண்ணப்பிக்குமாறு கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ மற்றும் மாணவிகளுக்காக 28 விடுதிகள் இயங்கி வருகின்றன. இதில் 14 விடுதிகள் பள்ளி மாணவர்களுக்கும், 7 விடுதிகள் பள்ளி மாணவிகளுக்கும், 2 விடுதிகள் கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ மாணவர்களுக்கும், 5 விடுதிகள் மாணவிகளுக்கும் செயல்பட்டு வருகின்றன.

பள்ளிவிடுதிகளில் 4 முதல் 12 வகுப்பு வரை பயில்கின்ற மாணவ, மாணவிகளும், கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளும் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர். விடுதிகளில் மேற்குறிப்பிட்ட வகுப்பை சார்ந்த மாணவர்களும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். அனைத்து விடுதி மாணவர்களுக்கும் உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படுகிறது. 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும். 10ம் மற்றும் 12ம் வகுப்பு பயிலுபவர்களுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்கவேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது. தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிகாப்பாளர் அல்லது காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலகத்திலிருந்து இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதிகாப்பாளர், காப்பாளினியிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலகத்தில் வரும் 30ம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை அடுத்த மாதம் 3ம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்கவேண்டும்.

விண்ணப்பிக்கும் பொழுது மாணவ, மாணவிகள் சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்கலாம் அல்லது விடுதியில் சேரும் பொழுதும் இச்சான்றிதழ்களைஅளிக்கலாம். ஒவ்வொரு விடுதியிலும், முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு விடுதியிலும் மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களை எக்காலத்திலும் எந்த நேரத்திலும், எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் சேர்த்துக்கொள்ளவும் அவர்களது படிப்புமுடியும் வரை விடுதிகளில் தங்கிப் பயிலவும் அனுமதிக்கலாம். எனவே திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் மாணவ, மாணவிகள் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Related Stories: