விலங்குகள் தவறி விழுவதை தவிர்க்க திறந்து கிடக்கும் கிணற்றுக்கு இரும்பு கம்பி வலை அமைக்கப்படுமா?

திருப்போரூர், ஜூன் 25: திருநிலை ஊராட்சிக்கு உட்பட்ட கழனிப்பாக்கத்தில் திறந்து கிடக்கும் கிணற்றில் வன விலங்குகள் தவறி விழுவதை தவிர்க்க கம்பி வேலி அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்போரூர் ஒன்றியம், திருநிலை ஊராட்சியில் கழனிப்பாக்கம் கிராமம் உள்ளது. இங்கு, குடிநீர் சப்ளை செய்வதற்காக ஊராட்சிக்கு சொந்தமான கிணறு உள்ளது. இங்கிருந்து மோட்டார் மூலம் பம்பிங் செய்யப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அனுப்பப்படுகிறது. பின்னர், குழாய்கள் மூலம் வீடுகளுக்கும், தெருக்களுக்கும் உள்ள குழாய்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த குடிநீர் கிணறு வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. வனவிலங்குகள் தண்ணீர் தேடி வரும்போது, இந்த கிணற்றில் தவறி விழுந்து இறக்கின்றன. குறிப்பாக, குரங்குகள் அதிக அளவில் உள்ளே இறங்கி விடுகின்றன. ஒரு சில நேரங்களில் புள்ளிமான்களும் கிணற்றில் விழுந்துவிடுகின்றன. இதன் காரணமாக கிணற்று நீர் மாசடைந்து விடுகிறது.இவ்வாறு மாசடையும் நீர் குழாய்கள் மூலமாக பொதுமக்களுக்கு சப்ளை செய்யப்படுவதால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதை தவிர்க்க கிணற்றின் மேற்புறத்தில் வெளி நபர்கள் இறங்காதவாறும், வன விலங்குகள் உள்ளே இறங்காதவாறும் இரும்பு கம்பி வேலி பாதுகாப்புக்காக அமைக்க வேண்டுமென கழனிப்பாக்கம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: