செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும்: கலெக்டர் உத்தரவு

செங்கல்பட்டு, ஜூன் 25: செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் அனைவரும் அவசியம் முகக்கவசம் அணியவேண்டும் என மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் பொதுமக்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக கலெக்டர் ராகுல்நாத்  வெளியிட்ட அறிக்கை: செங்கல்பட்டு மாவட்டத்தில், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்கள் அனைவரும் அவசியம் முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் உரிய சமூக இடைவெளியினை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். அனைத்து வணிக விற்பனை கூடங்கள் மற்றும் உணவகங்களில் நுழைவு வாயிலில் கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி பயன்படுத்துதல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது. மேலும், உடல் வெப்பநிலையை வெப்பநிலைமானி  கருவி மூலம் கண்காணிக்க வேண்டும்.

பொதுமக்கள் அனைவரும் முதல் தவணை, இரண்டாம் தவணை மற்றும் முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசிகள் கட்டாயமாக போட்டுக் கொள்ளுதல், அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல், முறையாக முகக்கவசம் அணிதல், பொது இடங்களில்  சமூக இடைவெளியை முறையாக பின்பற்றுதல் மூலமாகவும்  கொரோனா நோய் தொற்றுலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து துறைகளுக்கும்  அறிவுறுத்தப்படுகிறது. கொரோனா அறிகுறிகளான காய்ச்சல், தொண்டை வலி, நாவில் ருசி தெரியாமல் இருந்தால் ஆகியவை இருந்தால் அருகில் உள்ள மருத்துவமனைகளை அணுக வேண்டும். மேலும், அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்கள்  கொரோனா  தடுப்பு நடவடிக்கையாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை  முறையாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: