மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் காரணமாக ஜிஎஸ்டி சாலையில் இரவு 11 முதல் 5 மணி வரை போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு

சென்னை: சென்னை மவுண்ட், பாலாஜி மருத்துவமனை அருகில் ஜி.எஸ்.டி சாலையில் நெடுஞ்சாலை துறையினரால் நிரந்தர  மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெறுவதால் இன்று மற்றும் நாளை இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: சென்னை மவுண்ட், பாலாஜி மருத்துவமனை அருகில் ஜி.எஸ்.டி சாலை, உள் செல்லும் சாலையில் பின்னர் வெளி செல்லும் சாலையிலும் நெடுஞ்சாலை துறையினரால் நிரந்தர மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற இருப்பதால் வாகன போக்குவரத்தை மாற்றுப் பாதையில் செல்லும் படி சோதனை அடிப்படையில் இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாட்களும் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 வரை சோதனை ஓட்டம் நடைபெறும். பின்னர் நேரடி பணி 18ம் தேதி மற்றும் 19ம் தேதி ஆகிய இரு நாட்களும் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 வரை நடைபெறும். அதற்கு கீழ்க்கண்ட சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

ஜிஎஸ்டி சாலை விமான நிலையத்திலிருந்து வரும் வாகனங்கள் கத்திப்பாரா பாலத்தில் மேலே நேராக சென்று (கிண்டி போகும் வழி செல்லாமல்) சிப்பெட் சந்திப்பில் வலது புறம் திரும்பி திரு.வி.க தொழிற்பேட்டை சாலை வழியாக கிண்டி பேருந்து நிலையம் வந்து அண்ணா சாலை சென்றடையலாம். பூந்தமல்லியில் இருந்து வரும் வாகனங்கள் மாற்றம் எதுவுமின்றி வழக்கமான சாலையில் (கத்திப்பாரா வழியாக) செல்லலாம். வடபழனியிலிருந்து வரும் வாகனங்கள் மாற்றம் ஏதுமின்றி வழக்கமான சாலையில் (கத்திப்பாரா சர்வீஸ் சாலை வழியாக) செல்லலாம்.

கத்திப்பாரா சர்வீஸ் சாலை வேலை நடைபெறும் போது வடபழனியில் இருந்து வரும் வாகனங்கள் சிப்பெட் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி திரு.வி.க தொழிற்பேட்டை சாலை வழியாக கிண்டி பேருந்து நிலையம் வந்து அண்ணாசாலை சென்றடையலாம். எனவே சாலை பயனாளர்கள் அனைவரும் தங்கள் பயனத்தில் மேலும் சுமார் பத்து நிமிட தாமதத்தை எதிர்பார்த்து திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: