ஆசிரியை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 7 பவுன் நகை பறிப்பு

நெய்வேலி, ஜூன் 14: நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 25 பெண்ணையர் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி அருள்செல்வி (42). இவர் நெய்வேலி வட்டம் 25 இல் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு 8 மணி அளவில் சக்திவேல் தனது வீட்டிலிருந்து அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது சக்திவேல் மனைவி அருள்செல்வி தனது மகளுடன் வீட்டின் எதிரில் அமர்ந்து காய்கறி வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் திடீரென அருள்செல்வி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெய்வேலி டிஎஸ்பி ராஜேந்திரன் மற்றும் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். என்எல்சி குடியிருப்பு பகுதியில் பள்ளி ஆசிரியர் கழுத்தில் கத்தி வைத்து தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: