விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

விருத்தாசலம், ஜூன் 14: விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய சேர்மன் மலர் முருகன் தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் பூங்கோதை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயக்குமாரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மேலாளர் சிவா அனைவரையும் வரவேற்றார். இக்கூட்டத்தில் விருத்தாசலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வார்டு கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். இதில் வரவு- செலவு கணக்கு வாசிக்கப்பட்டு, பொது நிதிகளில் பணிகள் தேர்வு செய்வது குறித்து தீர்மானிக்கப்பட்டது. மேலும் அனைத்து வார்டுகளிலும் குடிநீர், கழிவுநீர் கால்வாய் வசதி, சாலை வசதி உள்ளிட்ட கவுன்சிலர்களின் அனைத்து கோரிக்கைகளும் மன்ற பொருளாக முன்வைக்கப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் தீர்மான நோட்டு அனைவரிடத்திலும் காண்பிக்கப்பட்டபோது இளமங்கலம் கவுன்சிலர் செந்தில்குமார் நோட்டு பக்கங்களை தனது செல்போனில் படம் பிடித்தார். இதற்கு மற்ற கவுன்சிலர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது ஒருவரை ஒருவர் காரசாரமாக பேசிக்கொண்டனர். மேலும் ஆனந்த கண்ணன் என்ற கவுன்சிலர், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து தேர்தல் நடந்தபோது வாக்களித்த நிகழ்ச்சியினை செல்போனில் படம் பிடித்து வெளியில் காண்பித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அவர் மீது வழக்கு தொடருவேன் என்று கூறினார். இச்சம்பவத்தால் சிறிது நேரம் கூட்டரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. இக்கூட்டத்தில் 2 கவுன்சிலர்கள் தவிர 17 கவுன்சிலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: