மக்கள்குறைதீர் கூட்டத்தில் 187 மனுக்கள் குவிந்தன பயனாளிகளுக்கு கலெக்டர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

திருவாரூர், ஜூன் 14: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 187 மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டதுடன், 16 பேர்களுக்கு ரூ ஒரு லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தலைமையில் நேற்று மக்கள் குறைதீர்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன் மற்றும் வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 187 மனுக்களை பொது மக்களிடமிருந்து கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.

பின்னர் இந்த மனுக்கள் அனைத்தையும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி குறித்த காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 5 நபர்களுக்கு ரூ.21 ஆயிரத்து 895 மதிப்பிலான இலவச தையல் இயந்திரமும், 6 நபர்களுக்கு ரூ.30 ஆயிரத்து 108 மதிப்பிலான இலவச சலவைபெட்டியும், தமிழ்நாடு நரிகுறவர் நலவாரியத்தின் மூலம் ஒரு நபருக்கு இறப்பு நிவாராண உதவித்தொகைக்கான ரூ. ஒரு லட்சத்திற்கான காசோலையும், ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 4 நபர்களுக்கு ரூ.18 ஆயிரத்து மதிப்பிலான இலவச தையல் இயந்திரமும் என மொத்தம் 16 பயனாளிகளுக்கு ரூ. ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 3 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார். மக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கண்மணி, கலெக்டரின் நேர்முக உதவியாளார்கள் புண்ணியகோட்டி (பொது), ஹேமாஹெப்சிபா நிர்மலா (வேளாண்மை) மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: