வத்திராயிருப்பு, ஜூன் 13: வத்திராயிருப்பு பேரூராட்சி சார்பில் ‘எனது குப்பை எனது பொறுப்பு’ என உறுதி ஏற்கும் வகையில் வீடு, வீடாகச் சென்று குப்பைகள் தரம் பிரித்து வழங்குதல் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் நெகிழி பயன்பாட்டை குறைத்து மஞ்சள் பை உபயோகம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மஞ்சள் நிற பை வழங்கப்பட்டது. தூய்மைப்பணியாளர் மான்ராஜ், பாண்டி, குரு ஆகியோர் பணியை கௌரவிக்கும் விதமாக பேரூராட்சி தலைவர் தவமணி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். செயல் அலுவலர் பொறுப்பு அன்பழகன், சுகாதார மேற்பார்வையாளர் ராமச்சந்திரன், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.