திண்டுக்கல், வேடசந்தூரில் 850 கிலோ குட்கா பறிமுதல்
திண்டுக்கல்/வேடசந்தூர், ஜூன் 14: வேடசந்தூர் பகுதியில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாக ஐஜி மற்றும் எஸ்பி தனி பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வேடசந்தூரில் நாகம்பட்டியை அடுத்த, எவரடி ஸ்பின்னிங் மில் பஸ்நிறுத்தம் அருகே, நின்றிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை வேடசந்தூர் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் பெயர் நசுருதீன் (24), நிஜாமுதீன் (22) ஆகியோர் எனவும், 100 கிலோ குட்காவை பதுக்கி வைத்திருப்பதையும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தனிப்பிரிவு போலீசார் குட்காவை பறிமுதல் செய்து, வேடசந்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.இதேபோல, திண்டுக்கல் நகர் தெற்கு காவல்நிலைய சப்இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் தலைமையிலான தனிப்படை போலீசார், திண்டுக்கல் பிஸ்மி நகரைச் சேர்ந்த முகமது யூனிஸ் வீட்டில் சோதனை செய்து 750 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய முகமது யூனிஸை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.