திருவாரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பிக்க அழைப்பு

திருவாரூர், ஜூன் 11: திருவாரூரில் இயங்கி வரும் மாவட்ட அரசு இசை பள்ளியில் அரசு ஊக்கத்தொகையுடன் கூடிய 3 வருட பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதால் ஆண், பெண் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் வாசன் நகரில் மாவட்ட அரசு இசைப்பள்ளி இயங்கி வருகிறது. தமிழக அரசின் கலைப்பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கிவரும் இந்த இசைப்பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய கலைகள் மிகச் சிறப்பாக 3 வருட முழு நேர பயிற்சி அளிக்கப்பட்டு தமிழக அரசின் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு விதிகளின்படி இலவச விடுதி, கல்வி உதவித்தொகை, இலவச பேருந்து கட்டண சலுகைகள் மற்றும் மாதந்தோறும் கல்வி ஊக்கத்தொகை ரூ.400 வழங்கப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சேர்வதற்கு 12 முதல் 25 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். குரலிசை, பரதநாட்டியம், வயலின், மிருதங்கம், தவில், தேவாரம் ஆகிய கலைகளுக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதுமானது. அதன்படி நடப்பாண்டிற்கான மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கல்விகட்டணம் ரூ.350 மட்டும் செலுத்த வேண்டும். ஆண் மற்றும் பெண் இருபாலரும் சேரலாம். மேற்கண்ட தகுதியுடைய நபர்கள் மேலும் விவரங்களுக்கு மாவட்ட அரசு இசைப்பள்ளியின் தலைமை ஆசிரியரை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு திருவாரூர்மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Related Stories: