பெட்ரோல் பங்க் உரிமையாளரை வாளால் வெட்ட முயற்சி

புதுக்கோட்டை,ஜூன் 11: புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட இராக்கத்தான்பட்டியில் ராமநாதபுரத்தை சேர்ந்த பாலா என்ற நீலமேகம் என்பவர் கிராவல் மண்னை லாரிகள் மூலம் எடுத்து வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் கிராவல் மண் எடுக்கும் லாரிகளுக்கு இராக்கதான்பட்டி அருகே உள்ள நடராஜன் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் தொடர்ந்து டீசல் நிரப்புவதை நீலமேகம் வாடிக்கையாக வைத்திருந்தார். பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு டீசலுக்கு ரூ.1 லட்சத்து 57 ஆயிரம் கடன் பாக்கி உள்ளது. இந்நிலையில் நீண்ட நாட்களாக அந்தப் பணத்தை தராததால் பெட்ரோல் பங்க் உரிமையாளர் நடராஜன் நேற்று முன்தினம் நீலமேகத்திடம் நேரில் சென்று டீசலுக்கான கடன் தொகையை கேட்டார். அப்போது நீலமேகம் தனது காரின் டிக்கியில் வைத்திருந்த வாளை வைத்து நடராஜனை வெட்ட முயற்சித்துள்ளார். இதனையடுத்து அருகே இருந்தவர்கள் அவரை தடுத்து சமாதானப்படுத்தினர். ஆனால் மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நீலமேகம் வாளைவைத்து நடராஜனை வெட்ட முயன்ற வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்த வீடியோ காட்சியை வைத்து புதுக்கோட்டை மாவட்டம் உடையாளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Related Stories: