குத்தாலம், ஜூன்11: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா பெரம்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முட்டம் கிராமத்தில் பழைமை வாய்ந்த மஹாபலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. மூன்றடி நிலம் கேட்டு விண்ணையும், மண்ணையும் பாதத்தால் அளந்த மகாவிஷ்ணு மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்கினார். ஐஸ்வர்யங்களை இழந்த மகாபலி சக்கரவர்த்தி சிவவழிபாடு செய்து வந்தார்.அதன் ஒருபகுதியாக மயிலாடுதுறையை அடுத்த முட்டம் கிராமத்தில் அமைந்துள்ள பெரியநாயகி சமேத சுயம்பு மஹாபலீஸ்வரர் கோயிலில் மகாபலி சக்கரவர்த்தி வழிபாடு செய்து இழந்த ஐஸ்வர்யங்களை மீட்டதாக புராண வரலாறு கூறுகிறது.3000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயில் சிதிலமடைந்து தற்போது ஒரு கீற்றுக் கொட்டகையில் சுவாமி, அம்பாள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்து மகாசபா ஆலய பாதுகாப்பு பிரிவு மற்றும் கிராமமக்கள் சார்பில் கோயில் திருப்பணி செய்ய திட்டமிடப்பட்டு திருப்பணி தொடக்க விழா நடந்தது. அதனையொட்டி 8ம் தேதி விக்னேஸ்வர பூஜை பஞ்சாட்சரம் ஹோமம் தொடங்கியது. இதில் திருவாவடுதுறை ஆதீன கட்டளை விசாரணை மத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் திருப்பணித் தொடங்கியது.