அரவக்குறிச்சி பகுதியில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்
அரவக்குறிச்சி, ஜூன் 11:அரவக்குறிச்சியில் முக்கிய சாலைகளாக கரூர் சாலை, சின்னத்தாராபுரம் சாலை, கடை வீதி, பள்ளபட்டி சாலை, புங்கம்பாடி சாலைகள் உள்ளன. இந்த சாலைகள் வழியாகத்தான் அரவக்குறிச்சிக்குள் வரவேண்டும். தினசரி இந்த சாலைகளில் பள்ளி வாகணங்கள், லாரிகள், பயணிகள் பேரூந்துகள், இவ்வழியாக திண்டுக்கல், கரூர், பழனி, பொள்ளாச்சி, உடுமலை, கோவை என்று பல்வேறு மாவட்டத்திலுள்ள ஊர்களுக்கு என அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன். இச்சாலைகளில் செல்லும் வாகனங்கள் விபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாச் செல்கின்றன.சாலை பாதுகாப்பு விதிகளின்படி தேசிய சாலைகளில் 70 கிமீ, மாநில சாலைகளில் 60 கிமீ, நகர்புறச் சாலைகளில் 45 கிமீ வேகத்திலும் செல்ல வேண்டும். இந்த சாலை விதிகளை கடைபிடிக்காமல் நகர்புறங்களிலேயே ஹாரனை அலற விட்டுக் கொண்டு அதிவேகமாச் செல்கின்றன.இதனால் சாலையில் செல்லும்பொதுமக்கள் அச்சம் அடைகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரவக்குறிச்சி பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாகச் செல்லும் வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.