ஓட்டப்பிடாரம், ஜூன் 11: ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அ.குமராபுரம் கிராமத்தில் மக்களை சந்தித்து சண்முகையா எம்.எல்.ஏ குறைகள் கேட்டறிந்தார். கிராமமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, ஆபத்தான நிலையில் உள்ள வாட்டர் டேங்க் மற்றும் கிராமத்திற்கு இயக்கப்பட்டு வந்த தனியார் மினி பேருந்து மற்றும் தூத்துக்குடியில் இருந்து குமராபுரம் வழியாக குளத்தூர் வரை இயங்கிவந்த அரசு பேருந்து தற்போது ஓடாததை மீண்டும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையின் பேரில் உடனடியாக சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை ஆய்வு செய்த எம்.எல்.ஏ, சம்மந்தபட்ட அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு பேசினார். மேலும் மக்களின் அனைத்து கோரிக்கைகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.