தூத்துக்குடி மாவட்டத்தில் புகையிலை கலந்த உணவு பொருட்கள் விற்ற 4 கடைகளுக்கு சீல்

தூத்துக்குடி, ஜூன்11: தூத்துக்குடி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் கலந்த உணவு பொருள் விற்பனை செய்த 4 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துணை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் புகையிலை கலந்த உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று போலீசாருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கோவில்பட்டி, விளாத்திகுளம், குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் புகையிலை கலந்த உணவு பொருட்களை விற்பனை செய்ததாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன், 4 கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். அதே போன்று முதல் முறையாக புகையிலை கலந்த உணவு பொருட்களை விற்பனை செய்ததாக 5 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.மேலும் உணவு வணிகர்கள் யாரேனும் மெல்லும் புகையிலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை அல்லது நிகோட்டின் கலந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், கடையை மூடி சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தடை செய்யப்பட்ட உணவுப்பொருட்களின் விற்பனை குறித்தோ அல்லது அதை விற்கும் கடைகள் குறித்தோ புகார் அளிக்க விரும்பினால், 94440 42322 என்ற மாநில வாட்ஸ்அப் புகார் எண்ணுக்கு அனுப்பலாம். புகாரைப்பெற்றுக்கொண்ட அடுத்த 48 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை அளிக்கப்படும். மேலும், புகார் அளிப்பவரது விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். இதனை தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

Related Stories: