ஆத்தூர், ஜூன் 11: ஆத்தூர் வசிஷ்ட நதியின் குறுக்கே கட்டப்படும் உயர்மட்ட பாலம் பணிக்காக, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், பாலம் பணிகளை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் -முள்ளுவாடி சாலையில் வசிஷ்ட நதியின் குறுக்கே, பழுதடைந்த பாலத்தை முற்றிலும் அகற்றி விட்டு, அதே இடத்தில் அகலமான புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாலம் அமையப்பெறும் இடத்தை, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆக்கிரமித்து, கடைகள் கட்டியுள்ளனர். மேலும், அங்குள்ள திறந்தவெளி கிணற்றின் தண்ணீரை, அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். பாலம் கட்டுமான பணிக்காக, அங்குள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற, நெடுஞ்சாலை திட்டங்கள் கோட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், பாலம் கட்டுமான பணிகளை நேற்று தடுத்து நிறுத்தினர்.