உத்தமபாளையம், ஜூன் 9: கம்பம் கிருஷ்ணாபுரம் பழைய செக்போஸ்ட் தெருவை சேர்ந்தவர் செல்வம் (45). இவர் உத்தமபாளையம் அருகிலுள்ள அம்மாபட்டியை சேர்ந்த சின்னச்சாமியின் தென்னந்தோப்பில் இரவு காவலராக கடந்த ஒன்றரை ஆண்டாக பணிபுரிந்து வருகிறார். இதே தோட்டத்தில் சின்னமனூரை சேர்ந்த மணிகண்டன், தனது மனைவியுடன் தங்கி வேலை செய்துள்ளார். நேற்று முன்தினம் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின் கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், கீழே தள்ளி விட்டதில் செல்வம் தலையில் அடிபட்டு ரத்தம் வர துவங்கியது. உடனே அவரை மீட்டு உத்தமபாளையம் ஜிஹெச்சில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்த பின் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு ஜிஹெச்சிற்கு அனுப்ப பரிந்துரை செய்தனர். ஆனால் செல்வம் தேனி க.விலக்கு ஜிஹெச் செல்லாமல் அம்மாபட்டியில் உள்ள தோட்டத்திற்கே சென்றார். இந்நிலையில் நேற்று காலை தோட்டத்தில் செல்வம் இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்ததும் உத்தமபாளையம் சிலைமணி உள்ளிட்ட போலீசார் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி க.விலக்கு ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர். கீழே தள்ளி விட்டதில் இறந்தாரா அல்லது அடித்து கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.