ஆர்.எஸ்.மங்கலம், ஜூன்9: வேளாண்மை உழவர் நலத்துறை மூலமாக மானாவாரி பகுதி மேம்பாடு குறித்த பயிற்சி முகாம் ஆர்.எஸ்.மங்கலம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் துணை இயக்குனர் பாஸ்கர மணியன் தலைமையில் நடைபெற்றது. முகாமில் கலந்து கொண்டு விவசாயிகள் மத்தியில் துணை இயக்குனர் பாஸ்கரமணியன், ஒருங்கிணைந்த முறையில் பண்ணையம் செய்வது குறித்தும் மானாவாரி பயிர்களான கம்பு,கேழ்வரகு, குதிரைவாலி மற்றும் எண்ணெய் வித்து பயிர்கள், பயிரிடும் முறைகள் குறித்தும் அதனை சந்தைப்படுத்தும் முறைகள் குறித்தும், நெல்வயல்களில் வரப்பு பயிராக பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்வது பற்றியும் நுண்ணுயிர் பாசனம் பற்றியும் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துக் கூறினார். ஒருங்கிணைந்த வேளாண்மையில் கால்நடை வளர்ப்பு,கோழி வளர்ப்பு, காளான் வளர்ப்பு, மீன் வளர்ப்புடன் சேர்த்து தோட்டக்கலை பயிர்கள் பயிர் செய்யும் போது மானாவாரி வேளாண்மையில் அதிக லாபத்தை பெற முடியும் என வட்டார வேளாண்மை இயக்குநர் ராஜலட்சுமி விவசாயிகளிடம் எடுத்துரைத்தார். மேலும் தீவனப்பயிர் குறித்து அதனை சாகுபடி செய்வது குறித்தும் ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்கும் முறைகள் குறித்தும் அதனை பயன்படுத்தும் முறைகள் குறித்தும் விவசாயிகளிடம் விளக்கி கூறினார்.