தொழில்முனைவோர்களுக்கு ரூ.3.45 கோடிக்கு கடன் உதவி

திருப்பூர், ஜூன் 9: திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் குழுமம் அனைத்து, வங்கிகளுடன் இணைந்து 75-வது ஆண்டு சுதந்திர தினவிழாவையொட்டி, தொழில்முனைவோர் கடன் வழங்கும் நிகழ்ச்சி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தலைமை தாங்கினார். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், கனரா வங்கி மண்டல அலுவலக உதவி பொது மேலாளர் கண்ணன், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் அசோக்குமார் மற்றும் உதவி திட்ட அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு, அரசின் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள், அரசின் தனிநபர் காப்பீடு திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தனர்.இந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு தாட்கோ, பி.எம்.இ.ஜி.பி., பி.எம்.ஸ்வாநிதி, கல்வி கடன் ஆகிய திட்டங்களில் வரைவோலை மற்றும் ஒப்புதல் கடிதம் ரூ.3.45 கோடிக்கு வழங்கப்பட்டது. மேலும், அரசு மற்றும் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் குறித்த தகவல்களை மாவட்ட தொழில்மையம், தாட்கோ போன்ற அரசு துறைகளும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் சார்ந்த தகவல்களை சிட்பியும், சுயவேலைவாய்ப்பு பயிற்சிகள் குறித்த தகவல்களை ஆர்.எஸ்.இ.டி.ஐ.யும், பிரதம மந்திரியின் சமூக பாதுகாப்பு திட்டங்கள் குறித்த தகவல்களை நிதிசார் கல்வி மையமும் தெரிவித்தனர். இதில் கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட வங்கிகள் மற்றும் 350க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் கலந்துகொண்டனர். மேலும், விழாவில் பெறப்பட்ட ரூ.2.64 கோடி மதிப்பிலான கடன் விண்ணப்பங்களை வங்கிகள் விரைந்து பரிசீலனை செய்ய வேண்டும் என முன்னோடி வங்கி மேலாளர் தெரிவித்தார்.

Related Stories: