ஊட்டி, ஜூன் 9: கோடை சீசனனையொட்டி ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தோட்டக்கலைத்துறை சார்பில் தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இம்முறை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்க விழாவில் கலந்துகொண்ட நிலையில் வழக்கத்தை காட்டிலும் தாவரவியல் பூங்காவில் பெரிய அளவிலான மேடை அமைக்கப்பட்டது. இந்த கலை நிகழ்ச்சிகளை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசித்தனர். கடந்த மாதம் 31ம் தேதி கோடை விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவடைந்தது. இதனால், மைதானத்தின் பெரும்பாலான பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு அரங்கு அமைக்கப்பட்டதால், புற்கள் அனைத்து வாடி போயின. மேலும் மழை காரணமாக புல் மைதானம் சேறும் சகதியுமாக மாறியது. இதனை தொடர்ந்து, தற்காலிகமாக அமைக்கப்பட்ட அரங்கை தோட்டக்கலைத்துறை அகற்றிய நிலையில், பாதிக்கப்பட்ட புல் மைதானத்தை சீரமைக்கும் பணியில் பூங்கா நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதனால், பூங்கா புல் மைதானத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.