பவானி, ஜூன் 9: பவானி ஊராட்சி ஒன்றியம், குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. ஊராட்சித் தலைவர் கே.ஏ.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பவானி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பூங்கோதை வரதராஜன், மாவட்ட கவுன்சிலர் கே.கே.விஸ்வநாதன், துணைத்தலைவர் தனலட்சுமி மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சிச் செயலாளர் சண்முகம் வரவேற்றார்.தமிழக அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்படி அனைத்து ஊராட்சிகளிலும் வேம்பு, புங்கன், அரச மரங்கள் நடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற இக்கருத்தரங்கில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கத் தேவையான மரங்கள் வளர்த்தல், கிராம பொருளாதார வளர்ச்சி, பிளாஸ்டிக் தவிர்த்தல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதையடுத்து, சமுதாயக் கூட வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டதோடு, அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.