ஊத்தங்கரை, ஜூன் 9: தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே வீரப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித். இவரது மனைவி சுஜாதா(20). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை அருகே ஆவாரகுட்டை கோயில் திருவிழாவுக்காக வந்திருந்தார். ஆவாரகுட்டையில் உள்ள உறவினர் வீட்டில் சுஜாதா தங்கியிருந்தார். கடந்த 3ம் தேதி, புளியானூர் ஏரியில் சுஜாதா துணி துவைத்து கொண்டிருந்த போது, தண்ணீரில் தவறி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து சிங்காரபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.