மாவட்டத்தில் குழந்தை திருமணம் இல்லாத நிலை உருவாக்க ஒத்துழைப்பு தரவேண்டும்
தர்மபுரி, ஜூன் 9: தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 5 மாதத்தில் 41 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், குழந்தை திருமணம் என்பதே இல்லாத நிலை உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு, தொழில் வளத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளதால், இங்குள்ளவர்கள் பெரும்பாலும் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்குச் சென்று, அங்கேயே தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் தங்களது குழந்தைகளை வயதான பெற்றோர், உறவினர்கள் பராமரிப்பில் சொந்த ஊரிலேயே விட்டுச் செல்கின்றனர். இத்தகைய சூழலில், திருமண வயதுக்கு முன்பே, அவர்களுக்கு குழந்தை திருமணம் செய்து வைக்கப்படுகிறது. மிகக்குறைந்த வயதில் திருமணம் செய்து வைப்பதால், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். தமிழக அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால், தற்போது இளம்வயது திருமணங்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன. இருப்பினும், சில இடங்களில் அறியாமையினால், இளம்வயது திருமணங்கள் தொடர்ந்து நடக்கிறது.
இதுகுறித்து கலெக்டர் திவ்யதர்சினி கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணத்தின் எண்ணிக்கை, இந்த ஆண்டில் கடந்த 5 மாதத்தில் மட்டும் 50 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 41 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. நடந்து முடிந்த 9 குழந்தை திருமணங்களுக்கு, எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட நபர்கள் மீது குழந்தை திருமணத்தடுப்பு சட்டத்தின் கீழ், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனி வருங்காலங்களில் தர்மபுரி மாவட்டத்தில் பெண்களுக்கு 18 வயதும், ஆண்களுக்கு 21 வயதும் பூர்த்தியடையாமல், குழந்தை திருமணம் செய்யும் பெற்றோர்கள் மற்றும் திருமணத்திற்கு உதவி புரியும் நபர்கள் மீது குழந்தை திருமணம் தடுப்புச்சட்டம் 2006ன் கீழ் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ₹1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், குழந்தை திருமணம் முடிந்து பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு இருந்தால், போக்சோ சட்டத்தில் குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகள், அதிகபட்சம் ஆயுள் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில், குழந்தை திருமணம் நடைபெறுவதாக தகவல் தெரிந்தால் உடனடியாக 1098, 1077, 181, 100 என்ற இலவச உதவி எண்களுக்கும் மற்றும் 04342 233088 என்ற எண்ணிற்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு புகார் தெரிவிப்பவர்களின் பெயர் மற்றும் முகவரி ரகசியமாக பாதுகாக்கப்படும். எனவே, தர்மபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணம் என்பதே இல்லாத நிலையை உருவாக்க, அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.