14 நாட்கள் நடக்கும் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக புத்தாக்க பயிற்சி தொடக்க விழா

தஞ்சாவூர், ஜூன் 9: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழத்தில் 14 நாட்கள் நடக்கும் புத்தாக்க பயிற்சியின் தொடக்க விழா நடந்தது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதி நல்கையுடன் உரையாசிரியர் பார்வையில் சங்க இலக்கியம் எனும் தலைப்பில் வரும் 21ம் தேதி வரை 14 நாட்கள் புத்தாக்கப் பயிற்சியை நடத்துகிறது. இதன் தொடக்க விழா நேற்று தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறைத் தலைவரும், புத்தாக்கப் பயிற்சி நிகழ்வு இயக்குநருமான பேராசிரியர் இளையாப்பிள்ளை வரவேற்றார். பல்கலை துணைவேந்தர் திருவள்ளுவன் தலைமை விகத்து பேசினார். தஞ்சை மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தின் நீதிபதி இந்திராணி, தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் சங்கர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ராம.கதிரேசன், சங்க இலக்கியம் என்பது ஒவ்வொரு உரையாசிரியர்களின் பார்வையிலும் வெவ்வேறு பட்டதாகவே அமைந்துள்ளது. நல்லேர் நடந்த நகைசால் விளைவயல் என்ற சங்க இலக்கிய வரிகளுக்கும் செம்புல பெயல் நீர் போல என்னும் வரிகளுக்கும் மனது பார்வையிலான பொருளினை விளக்கி பேசினார். புத்தாக்கப் பயிற்சிக்கு பதிவு செய்திருந்த பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் அரசுத்துறை ஆசிரியர்கள் வந்திருந்தனர். தமிழ்ப் பல்கலைக்கழக மொழியியல் துறை உதவிப் பேராசிரியர் பெருமாள் நன்றி கூறினார். தொடக்க விழாவிற்குத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட ஆய்வாளர் செந்தில்முருகன் இணைப்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் சின்னப்பன், துணைப்பதிவாளர் பன்னீர்செல்வம், கல்விநிலை ஆய்வு இயக்க இயக்குநர் தேவி, சுவடிப்புல பேராசிரியர் கண்ணன் மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: