நாகை அருகே தீ விபத்து கோயில், 7 வீடுகள் எரிந்து சேதம்: 7 ஆடுகள் கருகி பலி

கீழ்வேளூர், ஜூன் 9: நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த திருக்கண்ணங்குடி ஊராட்சி சின்ன முக்கால் முட்டத்தில் சுமார் 15க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் ஒரு வீட்டை தவிர அனைத்து வீடுகளும் கீற்றால் ஆன கூரை வீடுகள். கீற்றால் ஆன மாரியம்மன் கோயிலும் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை வீடுகளுக்கு அருகே வயலில் சுமார் ஒன்றையடி உயரத்திற்கு முளைத்து காய்ந்த புற்கள் எரிந்துள்ளது. அந்த புற்களில் இருந்து தீப்பொறி நடேசன் மகன் மணியன் என்பவர் வீட்டின் மேல் பட்டதாக கூறப்படுகிறது. அப்போது மணியனின் வீடு முழுமையாக எரிந்தது.

அருகே இருந்த மணியன் மகன் ராஜ்குமார், செந்தில்குமார், ராஜ்குமார், ரவி, அஞ்சான், இவரது மகன் ஜயப்பன் ஆகிய 7 பேர் வீடுகள் முழுமையாக எரிந்து வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள், பணம், நகை, பிரோ, டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் முழுமையாக எரிந்தது இவற்றின் மதிப்பு ரூ. 15 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் அந்த தெருவில் இருந்த கீற்றால் வேயப்பட்ட மாரியம்மன் கோயிலின் மேற்கூரை முழுமையாக எரிந்தது.

நாகையில் இருந்து மினி தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீ மேலும் பரவாமல் அணைத்தனர். தீ விபத்தில் வீட்டில் கட்டியிருந்த 4 ஆட்டுக் குட்டி மற்றும் 3 ஆடுகள் என 7 ஆடுகள் தீயில் கருகி பலியாயின. மேலும் ஒரு பசுமாட்டிற்கு உடலில் ஒரு பகுதி எரிந்த நிலையில் பசு மாடு அங்கிருந்து ஓடிவிட்டது. தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, கீழ்வேளுர் சட்ட மன்ற உறுப்பினர் நாகைமாலி, சட்ட மன்ற முன்னாள் உறுப்பினர் மாரிமுத்து, வட்டாட்சியர் ரமேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தியாகராஜன், ராஜகோபால், ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணி ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி வருவாய் துறை சார்பில் ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்கினர்.

Related Stories: