நாகை, ஜூன் 9: நாகை தாலுகா பகுதிகளுக்கான ஜமாபந்தி ஆர்டிஓ முருகேசன் தலைமையில் நாகை தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. நாகை மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர், வேதாரண்யம், திருக்குவளை, நாகை ஆகிய 4 தாலுகாவிற்கான ஜமாபந்தி நேற்று முன்தினம் தொடங்கியது. இதன்படி நாகை தாலுகாவிற்கான ஜமாபந்தி நாகை தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. ஆர்டிஓ முருகேசன் தலைமை வகித்தார். நாகை தாசில்தார் அமுதா முன்னிலை வகித்தார். இதில் நாகை வட்டம், திருகண்ணபுரம் உள்வட்டம் அம்பல், திருப்புகலூர், பொறக்குடி, கிடாமங்களம், ஏர்வாடி, கொங்கராயன் நல்லூர், கயத்தூர், மாதிரிமங்கலம், புத்தகரம் உள்ளிட்ட கிராமங்களில் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை, ஆதரவற்ற விதவை உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல் உள்ளிட்டவைகளுக்கு தீர்வு கோரி பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். இதில் வீட்டுமனை பட்டா, பட்டா திருத்தம் உள்ளிட்ட 44 மனுக்கள் பெறப்பட்டது. 23 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது விசாரணை நடந்து வருகிறது. தலைமையிடத்து துணை வட்டாட்சியர் நீலாயதாட்சி, விஏஓக்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.