பருத்தி சேலை உற்பத்தியாளர்கள் 3வது நாளாக தொடர் வேலைநிறுத்தம்

ராஜபாளையம், ஜூன் 8: ராஜபாளையம் நகர் மற்றும் ஆவரம்பட்டி பகுதிகளில் பருத்தி சேலை உற்பத்தி செய்யும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகிறது. இந்த தறிகளை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு ரூ. 16 லட்சம் மதிப்புள்ள 4 ஆயிரம் நூல் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் தினக்கூலியாக சுமார் ரூ. 5 லட்சம் வரை ஊதியம் பெற்று வருகின்றனர். இந்நிலையில் நூல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த ஒரு வருடத்தில் நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே நூல் விலை உயர்வை கண்டித்து ராஜபாளையம் மற்றும் ஆவாரம்பட்டி பகுதியைச் சேர்ந்த காட்டன் சேலை உற்பத்தி செய்யும் விசைத்தறி உற்பத்தியாளர்கள் கடந்த 5ம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். அதன்படி நேற்று 3வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.  தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, நூல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என பருத்தி சேலை உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: