கொடைக்கானல், ஜூன் 8: கொடைக்கானலில் விளையும் பழ வகைகளில் பிளம்ஸ், பேரிக்காய் மிக முக்கியமானதாகும். இதில் மருத்துவ குணங்கள் கொண்ட பேரிக்காயில் இரும்பு சத்து அதிகளவு இருப்பதுடன், வயிற்று கோளாறு, ஜீரண சக்திக்கு சிறந்த பழமாக விளங்குகிறது. பேரிக்காய் வெளிமாநிலங்களில் குறிப்பாக கேரளாவில் அதிகளவு விற்பனையாகும். தற்போது பேரிக்காய் சீசன் கொடைக்கானலில் துவங்கியுள்ளது. கொடைக்கானலில் வில்பட்டி, பள்ளங்கி, வடகவுஞ்சி, பெருமாள்மலை, பிரகாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பேரிக்காய் விளைவிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு குறைவான மகசூல் கிடைத்து வருவதால் ஒரு கிலோ பேரிக்காய் ரூ.40 முதல் ரூ.50 வரை விலை போகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பேரிக்காய் மகசூல் படிப்படியாக அதிகரித்து 30 முதல் 40 நாட்கள் வரை தொடரும் என்றும், அதிகளவில் மகசூல் கிடைக்கும் போது விலை குறையும் என விவசாயிகள் கூறினர்.