மார்த்தாண்டத்தில் பரபரப்பு 13 கிலோ கஞ்சாவுடன் பெண் உள்பட 2 பேர் கைது ₹60 ஆயிரம் பணமும் சிக்கியது

மார்த்தாண்டம், ஜூன் 8:மார்த்தாண்டத்தில் சென்னை பெண் உள்பட 2 பேர் 13.5 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மார்த்தாண்டம் மார்க்கெட் ரோடு பகுதியில் கையில் பொட்டலங்களுடன் 2 பேர் சந்தேப்படும் வகையில் நின்று கொண்டு இருந்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒரு ஆணையும், ஒரு பெண்ணையும் போலீசார் மடக்கிபிடித்து விசாரித்தனர். அப்போது 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 2 பேரையும் பிடித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கண்ணணூர் பூந்தோப்பு கொசகுடிவிளையை சேர்ந்த மத்தியாஸ் மகன் ராஜேஸ்வரன் (25), சென்னை பெரும்பாக்கம் ஹவுசிங்போர்டு காலனியை சேர்ந்த ரெகு மனைவி அஜந்தா (38) என்பதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அதில் பதிமூன்றரை கிலோ கஞ்சா இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து ரூ.60 ஆயிரம் பணம் மற்றும் கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 2 பேரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: