தர்மபுரி, ஜூன் 8: தர்மபுரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையில் கால்நடை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக வெளியாகும் வதந்திகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கால்நடை பராமரிப்புத்துறையில் கால்நடைகள் கையாளுதல், உதவியாளர் ஆகிய பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்படுவதாகவும், இதற்கு சம்பளமாக ₹15,000 மற்றும் ₹18,000 எனவும், தகுதி மற்றும் வயது ஆகியவை நிர்ணயிக்கப்பட்டு, 90 மணி நேரம் பயிற்சி அளித்து பணிநி யமன ஆணை வழங்கப்படும். இதற்கான ஆணை ஜூன் முதல் அல்லது 2வது வாரத்தில் வெளியிடப்படும். விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்திடுமாறு தலா 160 பணியிடங்கள்(ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 5 பணியிடங்கள் வீதம்) என தவறான செய்தி வாட்ஸ்அப் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மூலம் பகிரப்பட்ட செய்திகள் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறைக்கு தொடர்பற்றவை. இதுபோன்ற வதந்தி விளம்பரங்களைக் கண்டு பொதுமக்கள் ஏமாற வேண்டாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.