திண்டிவனம் அருகே நின்ற லாரி மீது கார் மோதி விபத்து தாய், மகன் உள்பட 3 பேர் பரிதாப பலி

வானூர், ஜூன் 7: திண்டிவனம் அருகே நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் தாய், மகன் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை ெபற்று வருகின்றனர். புதுச்சேரி மாநிலம் முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் முருகன் (40). இவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் திருத்தணி கோயிலுக்கு சென்றுவிட்டு, மீண்டும் காரில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை முருகன் ஓட்டி வந்தார். இந்த கார் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு திண்டிவனம் அருகே அருவாபாக்கம் என்ற இடத்தில் வந்த போது, சாலையோரம் நின்றிருந்த டிப்பர் லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில், முருகன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தாய் சாந்தி (60), மனைவி ஹேமாவதி (37), மகள்கள் கிருஷதா (3), கிருஷிதா (3), உறவினர் ஜெகதீஸ்வரி (58), மங்கலவதி (39), பூர்விகா (12) ஆகிய 7 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தி, மங்கலவதி ஆகிய 2 பேரும் உயிரிழந்தனர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கிளியனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி மீது கார் மோதிய விபத்தில் தாய், மகன் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: