பழுதான சாலையால் வாகனஓட்டிகள் அவதி
சேத்தியாத்தோப்பு, ஜூன் 7: சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கரைமேடு- தலைக்குளம் சாலை கடந்த 2019-2020ம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் பல லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கப்பட்டது. தரமின்றி சாலை போடப்பட்டதால் சாலை அமைக்கப்பட்ட 2 ஆண்டுகளில் ஜல்லிகள் பெயர்ந்து சேதமாகி உள்ளது. இதனால் விவசாயிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சாலை சேதமடைந்துள்ளதால் தலைக்குளம் கிராம மக்கள் அவசரகால தேவைகளுக்கு நகர்ப்புறங்களுக்கு விரைந்து செல்ல முடியாமல் கடும் அவதியடைந்தனர். மேலும் விவசாயிகள் தங்களது விளைநிலங்களுக்கு இடுபொருட்களை எடுத்து செல்ல முடியாமலும், அறுவடை செய்த நெல்லை மார்க்கெட் கமிட்டிகளுக்கு கொண்டு செல்ல முடியாமலும் கடும் அவதியடைந்து வருகின்றனர். சாலை நெடுகிலும் இருபுறமும் சாலையை மறைக்கும் வகையில் ஆக்கிரமித்து சம்பு மற்றும் செடிகொடிகள் ஓங்கி வளர்ந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சாலையை ஆய்வு செய்து சாலையை ஆக்கிரமித்துள்ள சம்பு, செடிகொடிகளை அகற்றி தரமான சாலையை அமைத்து கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.