கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க பெட்ரோல், மண்ணெண்ணெய் கேனுடன் வந்த மூதாட்டிகளால் பரபரப்பு

கடலூர், ஜூன் 7:   கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கூடுதல் ஆட்சியர் ரஞ்சித்சிங் மனுக்கள் பெற்றார். அப்போது அங்கு வந்த ஒரு பெண் வழக்கம்போல் மனுவை வழங்கி விட்டு, தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தன் மீது பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அங்கிருந்த போலீசார் அப்பெண்ணை வெளியே அழைத்து வந்து பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில், தீக்குளிக்க முயற்சித்த பெண் சிதம்பரம் பள்ளிப்படை பகுதியை சேர்ந்த சத்தியவேணி என தெரியவந்தது. மேலும் அவர் போலீசாரிடம் கூறியதாவது: நான் வசிக்கக்கூடிய பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகின்றேன்.

அந்த பகுதியை சேர்ந்த 4 பேர் திடீரென்று என் வீட்டை இடித்து விட்டனர். மேலும் எனது மகன் மற்றும் மகளை அடித்து துன்புறுத்தி வருகின்றனர். வீட்டிலிருந்த ஒரு லட்சத்து 27 ஆயிரம் பணத்தையும் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற நடவடிக்கையில் இனி வருங்காலங்களில் ஈடுபடக் கூடாது என எச்சரிக்கை செய்து போலீசார் பெண்ணை அனுப்பி வைத்தனர். மண்ணெண்ணெய் கேனுடன் வந்த மூதாட்டி: கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்து வருகின்றனர். போலீசார் கடும் சோதனைக்கு பிறகு ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்ல அனுமதித்து வருகின்றனர்.

அப்போது போலீசார் மனு கொடுக்க வந்த மூதாட்டியை சோதனை செய்தபோது மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த மூதாட்டியிடம் விசாரணை நடத்தியதில், புவனகிரி சிலந்திமங்கலத்தை சேர்ந்த சிவகாமசுந்தரி என்பதும், இவருக்கு சொந்தமான நிலத்தை கடந்த 2 ஆண்டுகளாக ஒரு நபர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாகவும் இது தொடர்பாக பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். போலீசார் சம்பந்தப்பட்ட மூதாட்டியிடம் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து தீர்வு காண வேண்டும். இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்து மூதாட்டியை அனுப்பி வைத்தனர்.

Related Stories: