உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பிரசாரம்
நாமக்கல், ஜூன் 6: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, நாமக்கல்லில் விழிப்புணர்வு பேரணி -பிரசாரம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ராமலிங்கம் எம்எல்ஏ மரக்கன்றுகளை நட்டு மாணவ, மாணவியரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, மண் வளம் காப்போம் இயக்கம் மற்றும் வாக்கர்ஸ் கிளப் சார்பில், நாமக்கல்லில் விழிப்புணர்வு பேரணி -பிரசாரம் நடைபெற்றது. பேரணியை நாமக்கல் ராமலிங்கம் எம்எல்ஏ துவக்கி வைத்தார். நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளியில் இருந்து துவங்கிய ஊர்வலம், பரமத்தி ரோடு, பூங்கா சாலை, மோகனூர் ரோடு வழியாக மீண்டும் பள்ளியை அடைந்தது. பேரணியில் மாவட்ட கல்வி அலுவலர்(பொ)சுப்பிரமணியன், அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பெரியண்ணன், உதவி தலைமை ஆசிரியர் ஜெகதீசன், வாக்கர்ஸ் கிளப் செயலாளர் ராஜூ, இன்ஜினியர் மணி, தொழிலதிபர் சரவணன், ஈஷா யோகா மைய நிர்வாகிகள், பள்ளி மாணவ- மாணவியர் கலந்து கொண்டனர். பேரணியின் நிறைவில், நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ராமலிங்கம் எம்எல்ஏ மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அப்போது, மரக்கன்று நடுவதன் அவசியம் மற்றும் அதன் மூலம் ஏற்படும் பயன்கள் குறித்து மாணவ, மாணவியருடன் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், வாக்கர்ஸ் கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.