விருத்தாசலம், ஜூன் 6: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள வேட்டக்குடியில் பிரன்னவ நாயகி உடனுறை பிரதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் தமிழ் முறைப்படி நடைபெற்றது. முன்னதாக கோயில் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் கடந்த 1ம் தேதியில் இருந்து யாகசாலை பூஜைகள் நடந்து திருவிளக்கு வழிபாடு, ஐங்கரன் வேள்வி, ஆவின வழிபாடு, நிலத்தேவர், திசைக் காவலர் வழிபாடுகள், ஆகம வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாம் கால பூஜைகள், 4ம் கால பூஜைகள், பரிவாரங்கள் நன்னீராட்டு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து திருமுறை விண்ணப்பம் பெற்று, திரு குடங்கள் கோயிலை வலம் வந்து விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்ற பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி வழிபட்டனர். தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கும், மூலவருக்கு மகா கும்பாபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.