போலீஸ்காரர் விஷம் குடித்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு

கடலூர், ஜூன் 3: வட்டிக்கு வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க முடியாததால், எஸ்பி அலுவலகம் அருகே போலீஸ்காரர் விஷம் குடித்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள குறிஞ்சிக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் (27). உளுந்தூர்பேட்டை 10வது பட்டாலியனில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை கடலூர் எஸ்பி அலுவலகம் வந்துள்ளார். அப்போது அவர் திடீரென சாலையில் மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்த அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அவர் விஷம் குடித்திருப்பது தெரியவந்தது. அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில், செல்வகுமார் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரிடம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார், பணத்தை முழுமையாக திருப்பி தராததால் அந்த பெண் அடிக்கடி பணத்தை கேட்டு தொந்தரவு செய்ததால் அவர் மீது புகார் அளிக்க கடலூர் எஸ்பி அலுவலகம் வந்தவர், மன உளைச்சல் காரணமாக, விஷம் குடித்ததாக கூறினார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: