சிவகங்கை, மே 28: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் பொதுமக்கள் பெரிதும் அறிந்திடாத சிவகங்கை மாவட்டத்தை சார்ந்த சுதந்திர போராட்ட தியாகிகள் புகைப்படங்கள் அடங்கிய நிரந்தர புகைப்படக்கண்காட்சியை கலெக்டர் மதுசூதன்ரெட்டி திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் தெரிவித்ததாவது: இந்திய நாட்டின் 75வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள் பெரிதும் அறிந்திடாத சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள், மொழிக்காவலர்கள், தமிழறிஞர்கள் ஆகியோரை பொதுமக்கள், எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில், நிரந்தர புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதில் தியாகிகள் திருப்புத்தூர் முத்துசாமி, கண்ணுச்சாமி, பீர்முகம்மது ராவுத்தர், ராஜகோபால், கூரிநாதர்பிள்ளை, கல்யாணசுந்தரம், சிவகங்கை மாணிக்கம், முத்துபாலகிருஷ்ணன், சின்னத்துரை, அதிகரம் மாயழகு, ஏனாபுரம் ராமஅங்குச்சாமி, தேவகோட்டை சின்னஅண்ணாமலை செட்டியார், எம்.அண்ணாமலை செட்டியார், ராமனாதன், கருப்பையா பண்டிதன், திருப்புவனம் நடராஜன், எ.வி.அம்பலம், கொன்னாத்தான்பட்டி முத்து (ஐ.என்.ஏ), அப்துல்முத்தலீப் (ஐ.என்.ஏ), பள்ளத்தூர் கருப்பன் செட்டியார் (ஐ.என்.ஏ), நாமனூர் நடராஜன் அம்பலம், படமாத்தூர் கருப்பையா, கீழாயூர் ராமு என்ற உடையார், எஸ்.புதூர் ராஜபிள்ளை, திருவேகம்பத்தூர் ராமையாதேவர் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், ஆர்டிஓக்கள் முத்துக்கழுவன் (சிவகங்கை), பிரபாகரன் (தேவகோட்டை), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சௌந்தரராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜபூபதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

