திருப்பூர், மே, 28: திருப்பூரை அடுத்த வஞ்சிபாளையம் மேம்பாலம் பகுதியில் நேற்று இரவு 4 பேர் மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில், சதாம் உசேன் என்பவரை, அவருடைய நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த காஜா, உதயகுமார் மற்றும் சிலர் சேர்ந்து கட்டையால் தாக்கி, கத்தியால் வெட்டி காயப்படுத்தியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த சதாம் உசேனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக திருமுருகன்பூண்டி போலீசார், காஜா, உதயகுமார் உள்ளிட்ட மூன்று பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் போது திடீரென காஜா கையில் அணிந்திருந்த இரண்டு மோதிரங்களை விழுங்கியதாக கூறியுள்ளார். இதனையடுத்து அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த போலீசார் ராஜாவை சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக திருமுருகன்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.