அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு 5 பணியிடங்களுக்கு 1000 பேர் குவிந்தனர்

ஈரோடு, மே 28:  இந்து அறநிலையத்துறையில் காலியாக உள்ள 5 பணியிடங்களுக்கான நேர்முக தேர்வில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்து  அறநிலையத்துறை ஈரோடு இணை ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக  உதவியாளர் பணியிடம் 3, இரவு காவலர் 1, ஓட்டுநர் பணியிடம் 1 என மொத்தம் 5  பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. அலுவலக உதவியாளர்  பணியிடம் மற்றும் இரவு காவலர் ஆகிய பணியிடங்களுக்கு குறைந்தபட்ச  கல்வித்தகுதியாக 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று  அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த பிப்ரவரி  மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து, நேற்று ஈரோடு திண்டல் முருகன் கோயிலில் வேலைவாய்ப்பு நேர்முக  தேர்வு நடைபெற்றது. இதில் 5 காலி பணியிடங்களுக்கு பள்ளி கல்வி  முடித்தவர்கள் மட்டுமல்லாது, பட்டதாரி இளைஞர்கள் என 1000க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர். நேர்முக தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்களை இந்து  அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, துணை ஆணையர்கள் ரமேஷ், மேகலா மற்றும்  அதிகாரிகள் நேர்காணல் செய்தனர்.

Related Stories: