பாதுகாப்பான சென்னை என்ற கருத்தை வலியுறுத்தி பெண்களுக்கான இரவு நேர மிதிவண்டி ஓட்டும் நிகழ்ச்சி: 6 இடங்களில் இன்று நடக்கிறது

சென்னை, மே 28: சிங்கார சென்னை 2.0 வீதி விழாவின் ஒரு பகுதியாக, பாதுகாப்பான சென்னை என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில்  பெண்களுக்கான இரவு நேர மிதிவண்டி ஓட்டும் நிகழ்ச்சி    இன்று  இரவு 8 மணி முதல் 9 மணி வரை நடைபெற உள்ளது  என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

பாலின வேறுபாடு இல்லாமல் பெண்கள் இயல்பாக பொதுஇடங்களை உபயோகப்படுத்துவதற்காகவும், பெண்களின் பாதுகாப்பு எல்லோருடைய பொறுப்பு என்பதை உணர்த்தும் வகையிலும்,  சிங்கார சென்னை 2.0  வீதி விழாவின் ஒரு பகுதியாக, பாதுகாப்பான சென்னை என்ற கருத்தை வலியுறுத்தி பெண்களுக்கான இரவு நேர மிதிவண்டி ஓட்டும் நிகழ்ச்சி  இன்று (28ம் தேதி)  இரவு 8 மணி முதல் 9 மணி வரை சென்னையில் 6 இடங்களில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியை   மேயர் பிரியா,   இந்திரா நகர் (எம்ஆர்டிஎஸ்) நுழைவாயில் அருகில் தொடங்கி வைத்து சைக்கிள் பேரணியில் கலந்து கொள்கிறார். இந்த சைக்கிள் பேரணி  இரவு 8 மணிக்கு இந்திரா நகர் (எம்ஆர்டிஎஸ்) நுழைவாயில் அருகில் புதிய மிதிவண்டி தடம் இடம், நேரு பூங்கா மெட்ரோ ரயில் நிலையம், எல்ஐசி மெட்ரோ ரயில் நிலையம், அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம், மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம், திருவல்லிக்கேணி (மெரினா) நீச்சல் குளம் ஆகிய 6 இடங்களில் தொடங்கி,  தியாகராய நகர் பாண்டி பஜாரில்  இரவு 9 மணிக்கு நிறைவடைகிறது.

இந்நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் https://forms.gle/Y3GBdvtWJgpuRhKCA என்ற இணைப்பை பயன்படுத்தி பதிவு செய்து சைக்கிள் பேரணியில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: