ஈரோடு, மே 27: திமுக தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊத்துக்குளியில் அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. தெற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார். தலைமை கழக தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கடலூர் புகழேந்தி, ரஜினிசெந்தில், இளைய கோபால் ஆகியோர் கலந்து கொண்டு ஓராண்டில் திமுக அரசு செய்த சாதனைகள் குறித்தும், மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் விளக்கி பேசினர். இதில், சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் கலந்து கொண்டு பேசியதாவது:ஊத்துக்குளி பகுதி மக்களின் கடும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னைகளுக்கு, கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதன் மூலம் தீர்வு காண முடிந்தது. ஊத்துக்குளி பேரூராட்சிக்கென்று, தனி வட்டாட்சியர் அலுவலகம், தீயணைப்புத் துறை அலுவலகம், நீதிமன்ற அலுவலகம், அரசு மருத்துவமனைகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தியது, உயர்நிலைப் பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியது போன்ற பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளில் பெரும் பங்காற்றி உள்ளேன்.