ஊட்டி, மே 27: தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள வெளி நாட்டு மலர்களான தூ லிப், ஆர்கிட் மற்றும் கேலாலில்லி போன்ற மலர்கள் வாடின. இருப்பினும், நீலகிரி மாவட்டத்திற்கே உரித்தான மலர்கள் மட்டும் பிரகாசமாக காட்சியளிக்கின்றன. கோடை சீசன் போது ஊட்டிக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதற்காக, பல்வேறு மலர்களை கொண்டு மலர் அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. இதனை கண்டு சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர். இம்முறை 124வது மலர் கண்காட்சி இம்மாதம் 20ம் தேதி துவங்கி 24ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடந்தது. இதனை பல லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர்.