கோவை, மே 27: கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழகம் தலைமை அலுவலகம் முன்பு மத்திய, மாநில, பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருங்கினைப்பு குழுவின் மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அரங்கநாதன், சேதுராமன், கிருஷ்ணமூர்த்தி, கருணாநிதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஓய்வூதியம் உயர்த்த வேண்டும். ஓய்வூதிய கால பணப்பயண்கள் உடனடியாக வழங்க வேண்டும். 77 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். அரசு ஓய்வூதியர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் போக்குவரத்து கழக ஓய்வூதியர்களை இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கம், பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்கம், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, அஞ்சல் ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்கம், போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகள் பங்கேற்றன.