நாகர்கோவில், மே 27: குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்படுகிறது. தொடர்ந்து பெய்து வருகின்ற மழையின் காரணமாக அணைகள் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணையில் நீர்மட்டம் வெள்ள அபாய அளவை எட்டியதால் அணைக்கு உபரியாக வருகின்ற தண்ணீர் மறுகால் மதகு வழியாக திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று மாவட்டத்தில் பரவலாக வெயில் கொளுத்திய நிலையில் காலை வரை மலையோர பகுதிகளில் சாரல் மழையும், ஒரு சில இடங்களில் பலத்த மழையும் காணப்பட்டது. நேற்று காலை வரை அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 32.8 மி.மீ மழை பெய்திருந்தது. மேலும் சிற்றார்-1ல் 14.6, பெருஞ்சாணி 9.8, புத்தன் அணை 7.2, சிற்றார்-2ல் 23.2, பாலமோர் 6.4, திற்பரப்பு 8.2 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது.