உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு 2 பெண்கள் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பட்டப்பகலில் 25 பவுன் நகை கொள்ளை

உளுந்தூர்பேட்டை, மே 27: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது வெள்ளையூர் கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் அப்துல்ரகீம் மனைவி பல்கீஸ்பீவி(63). இவர் நேற்று தனது மருமகள் ஷேகா(19) என்பவருடன் வீட்டில் இருந்தார். அப்போது பகல் 1 மணி அளவில் வீட்டிற்குள் முகக்கவசம் அணிந்து கொண்டு புகுந்த 3 பேர் கொண்ட கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் இரண்டு பேரையும் கத்தியை காட்டி மிரட்டியும், கழுத்தில் கத்தியை வைத்தும் அவர்கள் அணிந்து இருந்த நகைகளை பறித்தனர். பின்னர் இருவரையும் குளியல் அறையில் தள்ளி கதவை பூட்டி, ஒரு அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 25 பவுன் நகைகளை கொள்ளை அடித்து இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர். சிறிது நேரம் கழித்து உறவினர் ஒருவர் இவரது வீட்டிற்கு சென்றபோது கொள்ளை சம்பவம் குறித்து தெரிந்து உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். விரைந்து சம்பவ இடத்திற்கு சென்ற உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி மகேஷ், இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். குடியிருப்பு பகுதியில் பட்டப்பகலில் பைக்கில் முகக்கவசம் அணிந்து வந்து கத்தியை கழுத்தில் வைத்து 25 பவுன் நகை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: