காஞ்சிபுரம்: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் 0-6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவம் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனை முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதைதொடர்ந்து, உத்திரமேரூர் வட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில் 0-6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனை முகாம் அம்மையப்ப நல்லூர், மேல் தூளி ஊராட்சி தொடக்கப் பள்ளி வளாகத்தில் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடந்தது.
முகாமில் 140 குழந்தைகளுக்கு எடை மற்றும் உயரம் அளவீடு செய்து, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளுக்கு வளர்ச்சி கண்காணிப்பு அட்டை வழங்கி, ஊட்டச்சத்து வளர்ச்சி மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டது. முகாமில், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் விடுபடாமல் கலந்து கொள்ள உரிய ஏற்பாடுகள் செய்யும்படி கலெக்டர் ஆர்த்தி, அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதில், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பிரியா ராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநர் கிருஷ்ணவேணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.