தொண்டி, மே 26: தொண்டி அருகே ஆயிரவேலி கிராமத்தில் அமைந்துள்ள சுயம்பு ஆதிபராசக்தி அம்மன், விநாயகர், அங்காளம்மாள், கருப்பர் ஆலயங்களில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கடந்த மே 24ல் கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதலுடன் முதல் கால யாக பூஜை துவங்கியது. நேற்று கோ பூஜை, தீபாராதனை, 2ம் கால யாக பூஜை நடந்தது. பின்னர் சிவாச்சாரியார்கள் கலசங்களை சுமந்து கோயிலை வலம் வந்தனர். தொடர்ந்து வால்மீகநாதன், மணிகண்டன் குருக்கள் தலைமையில் வேதமந்திரங்கள் முழங்க புனித நீர் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் கிராமத்தினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.