கோவை, மே 26: கோவை-ஷீரடி தனியார் சுற்றுலா ரயில் சேவை, ஜூன் மாதத்தில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் சார்பில் (ஐஆர்சிடிசி) கோவை, சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வடமாநிலங்ளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவது வழக்கம். இந்நிலையில், தென்னக ரயில்வே சார்பில் தனியார் மூலம் ரயில்வே சேவையை துவங்கி, சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டது. அதன்படி, ஆன்மிகச் சுற்றுலா அழைத்து செல்ல ஒப்பந்த அடிப்படையில் பணம் செலுத்தி, ரயில்களை இயக்க தனியார் அமைப்புகள், நிறுவனங்கள் முன்வரலாம் என ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கோவையில் இருந்து ஷீரடிக்கு சுற்றுலா ரயிலானது தனியார் நிறுவனம் மூலமாக இயக்கிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.